சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, அடையாளம்பட்டு கிராமத்தில் உள்ள பாடசாலை தெருவில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அந்த பொது கழிப்பிடத்தை இடிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கழிப்பிடம் கட்டப்பட்டுள்ள நிலம் பொதுப்பாதை என்பதாலும், தனியார் பட்டா நிலம் என்பதாலும், புதிய இடம் கண்டறியப்பட்டு கழிப்பிடம் கட்டப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக் கழிப்பிடங்களை பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்ட முடியாது. அரசு நிதியை கையாளும் அதிகாரிகள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது. தவறுதலாக பொதுப் பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் பொதுகழிப்பிடம் கட்டிவிட்டதாக கூறமுடியாது. எனவே, ஆறு வாரங்களில் மாற்று இடத்தை கண்டறிந்து, பொது பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்டப்பட்ட கழிப்பிடத்தை இடிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post பொது நிதியை கையாளும் அதிகாரிகள் நிதியை வீணாக்காமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.