ஒரு யூனிட் ரூ.8.15ல் இருந்து ரூ.5.50 ஆக குறைகிறது அடுக்குமாடி மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமல்: அரசாணை வெளியீடு

சென்னை, நவ.1: அடுக்குமாடி குடியிருப்பு கட்டண குறைப்பு மின்கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி மின் கட்டண ஆணை எண் 7, 2022 செப்டம்பர் 9ம் தேதி உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15 பைசாவிலிருந்து ரூ.5.50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IEஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50 யூனிட் என நிர்ணயித்தும் இன்று முதல் அமலுக்கு வருமாறு ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஒரு யூனிட் ரூ.8.15ல் இருந்து ரூ.5.50 ஆக குறைகிறது அடுக்குமாடி மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமல்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: