டெல்லி : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலங்கானா, மற்றும் ஒரு சில தென்கிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என்றும் 21ம் தேதி மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 20ம் தேதி வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post அரபிக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்… வங்கக்கடலிலும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி … வானிலை மையம் எச்சரிக்கை! appeared first on Dinakaran.
