1929 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு இயற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதனை செய்து காட்டியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அரசு கல்லூரிகளுக்கு அயல் பணியில் மாற்றப்பட்டனர். தற்போதைய நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணிபுரிந்து வருகிறார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை என்றும்; அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே திரும்ப எடுத்துக் கொள்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும்; அனுபவமும், தகுதியும் அதிகமாக இருந்தும் எவ்விதமான நிர்வாகப் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும்; அவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும்; ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்படுவதில்லை என்றும்; இவர்களை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணிபுரிகிறார்கள் என்பதுதான் என்று பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளுக்கு அயற் பணியில் மாற்றப்பட்ட பேராசிரியர்கள் அந்தந்த அரசுக் கல்லூரிகளிலேயே பேராசிரியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும். இதன்மூலம் கூடுதல் நிதிச் சுமை ஏதும் அரசுக்கு ஏற்படாது.
எனவே, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணியமர்த்தி, அவர்களுடைய மனஉளைச்சலைத் தடுத்து நிறுத்தவும், அவர்கள் பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அண்ணாமலை பல்கலை.,பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணியமர்த்த நடவடிக்கை தேவை : ஓபிஎஸ் appeared first on Dinakaran.