ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளை ஆய்வு செய்ய மாவட்ட, மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு: அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை சார்பில் அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்வி சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஓர் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று 2022-2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாவட்ட ஆட்சி தலைவர் இருப்பார். உறுப்பினர்களாக கோட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் (பள்ளி கல்வி) மற்றும் மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வி), பொது நல நோக்கில் ஆர்வமுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இருவர், அரசு பொது மருத்துவர், அரசு உளவியல் மருத்துவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தொழில் வழிகாட்டல் வழங்குபவர், மாவட்ட விளையாட்டு துறையின் விளையாட்டு அலுவலர், மாவட்ட மேலாளர் மற்றும் இளநிலை பொறியாளர்-தாட்கோ, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ஆகியோர் இருப்பார்கள்.

மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்பட வேண்டும். மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழுவின் தலைவராக தமிழக தலைமை செயலாளர் இருப்பார். உறுப்பினர்களாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், காவல் துறை தலைவர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), ஆதிதிராவிடர் நல இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநர், தாட்கோ மேலாண்மை இயக்குநர், க.தீனபந்து (ஐஏஎஸ் ஓய்வு), சி.செல்லப்பன் (ஐஏஎஸ் ஓய்வு), டாக்டர் குகானந்தம், ஜெயஸ்ரீ தாமோதரன் (தன்னார்வலர், அகரம் பவுண்டேசன்), டாக்டர் ஒ.உமாமகேஸ்வரி (அண்ணா பல்கலைக்கழக விரிவுரையாளர்) ஆகியோர் இருப்பார்கள். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூட்டங்கள் நடத்தி விடுதி முன்னேற்றம் மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளை ஆய்வு செய்ய மாவட்ட, மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: