வேலூர், நவ.2: வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வினியோகிக்க 20 டன் ப்ளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நிவர் புயல்காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைவெள்ளம் குடியிருப்புகளில் புகுந்தது. அதேபோல் வேலூர் மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில் திடீர்நகர், இந்திரா நகர், கன்சால்பேட்டை, காட்பாடி காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில மழைநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே மழைநீர் வற்றியதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது.
எனவே மாநகராட்சி சார்பில் ஏற்கனவே இருப்பில் இருந்து ப்ளீச்சிங் பவுடர் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. தற்போது, மேலும் பொதுமக்களுக்கு வழங்க 4 மண்டலங்களுக்கும் சேர்த்து 20 டன் ப்ளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.