தொண்டி, நவ.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானிலை மேக மூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற் பயிரில் குலைநோய் மற்றும் நெற்பழ நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நெற்பயிரில் இளம்பயிர் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். இந்நோய் தீவிரமாக தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலை நோய் எனப்படுகிறது.