பெரியகுளம், நவ. 30: பெரியகுளம் அருகே, கைலாசநாதர் மலைக்கோயிலில் நேற்று மாலை திருக்கார்த்திகை தீபம் 500 கிலோ நெய்யில் ஏற்றப்பட்டது.பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அடுத்து, இக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலத்தை போல, இக்கோயிலிலும் கிரிவலம் செல்வர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கைலாசநாதர், நந்திகேஷ்வரருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் 500 கிலோ நெய் கொண்ட அகண்ட தீப மண்டபம் அமைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.