உத்தமபாளையம், நவ. 25: தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர் பகுதியில் இருந்து தினசரி ரேசன் அரிசி, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அங்கு ஒரு கிலோ அரிசி ரூ.30 வரை விற்கப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க வேண்டிய தேனி பறக்கும்படை சிவில் சப்ளைத்துறை முடங்கிக் கிடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உத்தமபாளையம் புட்செல் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையிலான புட்செல் போலீஸார் தினமும் அரிசி கடத்தலை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் க.புதுப்பட்டி ஊத்துக்காடு என்னும் இடத்தில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த மினிலாரியை சோதனை செய்ததில், அதில் 3600 கிலோ ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த சரவணன் (36) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சுந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.