காரைக்குடி, நவ.24: காரைக்குடி நகர் பகுதி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பலவகையான மரங்கள் உள்ளன. கல்லூரி சாலையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. தவிர அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா மாதிரி பள்ளி, அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி வளாகங்களில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மரங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் விளம்பரங்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. தவிர சித்த மருத்துவ சிகிச்சை, மருத்துவமனை விளம்பரங்கள் போர்டுகளை ஆணிகளை கொண்டு அடித்துள்ளதால் மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரி சாலையில் உள்ள மரங்களில் இருந்து நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில், முகமது ஆசிக், செல்வகுமார், ரஞ்சித், அஜெய் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களில் மரங்களில் அடிக்கப்பட்ட 10 கிலோ ஆணிகளை எடுத்துள்ளனர்.