திருத்துறைப்பூண்டி, நவ.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரம் மங்கல் கிராமத்தில் நெல்பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு பண்ணை பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. பண்ணைப்பள்ளியில் மங்கல்கிராமத்தை சேர்ந்த 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியின்போது நெல் பயிரில் விதைப்பு தொடங்கி அறுவடை வரையிலான தொழில் நுட்பங்களும், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களும் விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இந்த பண்ணை பள்ளி பயிற்சி இரு வாரங்களுக்கு ஒரு முறை 6 பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின்போது வயல்களில் காணப்படும் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளுடைய எண்ணிக்கையினை கணக்கிட்டு தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அதிகஅளவு மகசூல் பெற வேண்டிய உயர் தொழில்நுட்பங்களான உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுதல், விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட சத்து இடுதல், சரியான இடைவெளியில் நடவு செய்து பயிர் எண்ணிக்கை பராமரித்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், நீர் மேலாண்மை போன்றவை எடுத்து கூறப்பட்டது.