ஆள்குறைப்பை கண்டித்து கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம்

திருமங்கலம், அக். 28: திருமங்கலம் அருகே கப்பலூரில் டோல்கேட் அமைந்துள்ளது. பெங்களூர்- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த டோல்கேட்டில் ஷிப்டு முறையில் 90 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் கப்பலூர் டோல்கேட்டினை சப் காண்டிராக்ட் எடுத்துள்ளது. இந்நிறுவனம் 62 பேர் மட்டும் பணியில் இருந்தால் போதும், மீதமுள்ள ஊழியர்களை பணியிலிருந்து விலகும்படி அறிவுறுத்தியதுடன் நேற்று அவர்களுக்கு வேலை இல்லை என அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 4 மணி ஷிப்டிற்கு வந்த ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுடன் ஷிப்டு முடித்த ஊழியர்களும் சேர்ந்து கொண்டனர். தகவலறிந்து வந்த திருமங்கலம் டவுன் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐ பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசமடைந்த ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தால் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கப்பலூர் டோல்கேட்டினை வாகனங்கள் சுங்க கட்டணமின்றி இலவசமாக கடந்து சென்றன.

Related Stories: