×

துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 20: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு (திமுக) ேபசியதாவது: துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 4,446 மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லூரியில் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினரோடு ஆய்விற்கு சென்றபோது, அங்கே ஒரு நூலகத்திற்கு கூடுதலாக கட்டிடமும், நூலகத்திற்கு அறைகலன்களும், விலங்கியல் துறைக்கு தனியாக ஒரு கட்டிடமும், அதேபோல், வேதியியல், உயிர் வேதியியல் துறை பிளாக் முழுவதுமாக செப்பனிட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஏனென்றால் இந்த கல்லூரியில் ஆண்டுக்காண்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பதால் 10 சதவீதம், 15 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு கூடுதலாக மாணவர் சேர்க்கை வருகின்ற போது, அதற்கேற்றார்போல் கட்டிடங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்த கல்லூரியை பொறுத்தளவில் மொத்த பணியிடங்கள் 172, அதில் விரிவுரையாளர்கள் 23 பேர். ஏற்கனவே, இந்த கல்லூரியில் 20 காலி பணி இடங்கள் இருக்கிறது. அதையும் சேர்த்து, தற்போது இந்த 4 ஆண்டுகளாக கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்ககை ஒதுக்கீடு செய்ததையும் சேர்த்து, கூடுதலாக ஆசிரியர்களையும், கூடுதலாக கல்லூரி கட்டிடங்களையும் கட்ட வேண்டும்.mஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்: பாரதி மகளிர் கல்லூரியை பொறுத்தவரை ஷிப்ட் 1ல் 3,809 மாணவிகள் படித்து கொண்டிருக்கிறார்கள். ஷிப்ட் 2ல் 637 மாணவிகள் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆசிரிய பெருமக்கள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டு தரமான கல்வி கற்று தரப்பட்டு கொண்டிருக்கிறது.

பி.கே.சேகர்பாபு: இந்த கல்லூரியில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகள்தான் அதிக அளவில் படிக்கிறார்கள். சாலையோரங்களிலே வசிக்கின்ற, குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் கூட இந்த கல்லூரியிலே படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி பிரகாசம் சாலையிலே அமைந்திருக்கிறது. கல்லூரியின் முதல் கட்டிடமும், இரண்டாவது கட்டிடமும் இருக்கின்ற இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் கூட கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அங்கு நடைமேம்பாலம் ஒன்று அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

உடனடியாக அந்த நடைமேம்பாலத்தை கட்டினால், விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் இந்த கல்லூரிகளுக்கு தேவையான கட்டிடங்களை கட்ட, ஒதுக்கப்படுகின்ற நிதியில் 30 சதவீதமாவது இந்த கல்லூரிக்கு பயன்படுத்த வேண்டும். அமைச்சர் கே.பி.அன்பழகன்: மாணவிகளுடைய சேர்க்கை கூடுதலாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தால் அந்த கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. கடந்த உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.150 கோடி  ஒதுக்கியுள்ளார். அந்த நிதியில் இருந்து வரும் கல்வியாண்டிற்குள் அந்த 10 வகுப்பறைகளை அரசு கண்டிப்பாக கட்டித்தரும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : Classrooms ,constituency ,Bharathi Ladies' College ,
× RELATED கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி...