திருவாரூர், மார்ச் 19: குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதி கிளை சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முகமது பாசீத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தெற்கு மாவட்ட செயலாளர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் கோவை அப்பாஸ் பேசினார்.