இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி, மார்ச் 17: இளம்பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை  விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் பசவராஜ் (எ) காளையா(28). இவர்  2018ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை  கடத்தி வந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக ஓசூர் டவுன்  அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜை கைது செய்தனர். இந்த  வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட  பசவராஜூக்கு இளம்பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும்,  ₹1000 அபராதமும், தவறான தகவல்களை கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக 10 மாத சிறை  தண்டனையும், ₹1,000 அபராதமும், போக்சோ பிரிவிற்கு 10 ஆண்டு சிறை  தண்டனையும், ₹1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக  காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கில்  அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.

Related Stories: