கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் 50 பேருக்கு, குறுகியகால கல்வெட்டு பயிற்சி வழங்கப்பட்டது. முதல் நாளான கடந்த 10ம் தேதி பயிற்சியின் துவக்க விழா நடந்தது. அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சரவணகுமார், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முதல் நாளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்றும் வரலாற்றுக் காலம் குறித்த வரையறை, எழுத்துக்களின் தோற்றம் மற்றும் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழி எனும் எழுத்துக்களை தாமே எழுதி, படிக்க கற்றுத்தரப்பட்டது.