வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகோவிந்தன்(28). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூக்கொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியதில், படுகாயமடைந்த  ஹரிகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல், பழைய போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சச்சின்(11). போச்சம்பள்ளி கல்லாவி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே சாலையோரம் சச்சின் நடந்து சென்றுகொண்டிருந்தான்.

அப்போது, அவ்வழியாக வந்த டூவீலர் சச்சின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சிறுவன், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சரோஜா(58). இவர், சிங்காரப்பேட்டை- திருவண்ணாமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், சரோஜா படுகாயமடைந்தார். அவரை மீட்ட மக்கள், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: