வேளச்சேரி - பரங்கிமலை இடையே 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளபறக்கும் ரயில் பாதையை விரைவில் முடியுங்கள்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பறக்கும் ரயில் பாதையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) பேசியதாவது: ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆதம்பாக்கம் ஏரியை சீரமைப்பதற்காக ₹3.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வேளச்சேரி - பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாதை நிறைவடையாமல் உள்ளது. இந்த பணிகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலந்தூர் தொகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, நெம்மேலி கடல் குடிநீரை கூடுதலாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலந்தூரில் சார்பு நீதிமன்றத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நிலம் எடுக்கின்ற பிரச்னைகள் காரணமாக தான் நிலுவையில் இருக்கிறது. நிலம் எடுப்பது எவ்வளவு பிரச்னையான ஒன்று என்று உங்களுக்கு நன்றாக தெரியும். உடனடியாக நில உரிமையாளர்களிடத்தில் போய் அந்த நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, தான் முதற்கட்ட பணியை முடித்த பிறகு, பாலம் கட்டும் பணியை துவக்கி இருந்தால் சரியாக இருந்திருக்கும். திமுக ஆட்சி காலத்திலே நிலம் எடுக்கின்ற பணியை மேற்கொள்ளாமலேயே பாலம் கட்டும் பணியை துவக்கிய காரணத்தினால் தான் இவ்வளவு கால தாமதம் ஆகின்றது. இருந்தாலும் விரைந்து பாலம் கட்டும் பணியை முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.அதேபோல, ஏரி ஆக்கிரமிப்பு பற்றி சொன்னார்கள். ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு காலம் பிடிக்கும். உடனடியாக அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட காரணத்தினால் தான் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: