சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பறக்கும் ரயில் பாதையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) பேசியதாவது: ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆதம்பாக்கம் ஏரியை சீரமைப்பதற்காக ₹3.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வேளச்சேரி - பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாதை நிறைவடையாமல் உள்ளது. இந்த பணிகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலந்தூர் தொகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, நெம்மேலி கடல் குடிநீரை கூடுதலாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலந்தூரில் சார்பு நீதிமன்றத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.