சேலம், மார்ச் 12: தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத்தின் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம். இவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார். சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் கோட்டை பகுதியில், இச்சட்டத்திற்கு ஆதரவாக துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்போவதாகவும், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போவதாகவும் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் கோட்டை பகுதியில் கடந்த 24 நாட்களாக இஸ்லாமிய பெண்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் இப்ராகிம் துண்டுபிரசுரம் கொடுக்க வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதினர்.