ஓசூர், மார்ச் 10: ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் 3 மாநில பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மலைமேல் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலின் தேரோட்டம் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. விழாவில், கலெக்டர் பிரபாகர், ஆர்டிஓ குமரேசன், செல்லக்குமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏவும், சந்திரசூடேஸ்வரர் கோயில் கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன், பாஜ மாநில தலைவர் நரேந்திரன், மாவட்ட தலைவர் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜூ, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், ரஜினி மக்கள் மன்ற தலைவர் பாண்டி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர்பேட்டை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சென்றது. அப்போது பொதுமக்கள் பக்தி கோஷத்துடன் வாழைப்பழத்துடன் ஜவனா இலை, உப்பு, மிளகு உள்ளிட்ட பொருட்களை தேர் மீது இறைத்தனர்.