தேன்கனிக்கோட்டையில் வரதராய சுவாமி கோயில் ேதரோட்டம்
தேன்கனிக்கோட்டை, மார்ச் 6: தேன்கனிக்கோட்டை அருகே, வரதராய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்தில், வரதராய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்நிலையில், நேற்று தேரோட்டம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி வரதராய சுவாமி தேர் மீது வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அன்னியாளம், கக்கதாசம், ஹேசூர் அக்ரஹாரம், சீர்திம்மனட்டி, வரதரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். விழாவில் நீர்மோர், அன்னதாகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று 6ம்தேதி இரவு பாட்டுகச்சேரி, பல்லாக்கு ஊர்வலம் நடைபெறுகின்றது.