கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கத்திகளுடன் மோதல்

சென்னை: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து காயம் அடைந்தவர் உள்பட  தப்பியோடிய கல்லூரி மாணவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக  தாக்கி கொண்டனர். இதில் ஒரு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்ததும் அங்கு ரயிலுக்கு காத்திருந்த ஏராளமான பயணிகள் அலறியடித்து நாலாப்புறமும் ஓடினர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் கத்திக்குத்தில் காயம் அடைந்த மாணவன் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்  நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: