வாழப்பாடி, மார்ச் 3: வாழப்பாடியில், கடன் பிரச்னையில் வீடு புகுந்து 50 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி பேரூராட்சி 5வது வார்டு செல்லப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(50). இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வேல்முருகன் தனது நிலத்தை அடக்கு வைத்து சேசன்சாவடியைச் சேர்ந்த கணேசன்(40) என்பவரிடம் ₹5 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் வேல்முருகன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த அவரது மனைவியை சரமாரி தாக்கியுள்ளனர். இதனை தடுத்த உறவினர் மாதவன்(32) என்பவரையும் அடித்து, உதைத்துள்ளனர்.