கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது சங்கங்களை உள்ளடக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறை கூவலுக்கிணங்க, 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொழிலாளர் நல ஆணையரின் தலையீட்டினை தொடர்ந்து, பேச்சுவார்த்தை வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள யூகோ வங்கி முன்பு, அனைத்து வங்கி ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யூகோ வங்கி அதிகாரி ராமராவ் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலாளர் சந்தோஷ், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் ஜெகதீஷ்குமார், இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி பாலமுருகன், இந்தியன் வங்கி கிளை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். ஹரிராவ் நன்றி கூறினார்.