தர்மபுரி, பிப்.27: காரிமங்கலம் அருகே, முயல் வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கியுடன் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பால்ரஸ் குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து, போலீசார் விசாரித்தபோது அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி, கரிமருந்து ஆகியவை இருந்தது. இதனையடுத்து, இருவரையும் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த பாலன்(35), சேகர்(33) என்பது தெரியவந்தது. கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவர்கள், காட்டு பகுதியில் முயல் உள்ளிட்ட சிறுவிலங்குகளை வேட்டையாட சென்றதாக கூறினர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, பால்ரஸ் குண்டு 100 கிராம், கரி மருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.