×

முயல் வேட்டை வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருப்போரூர்: கள்ளத்துப்பாக்கி மூலம் முயல் வேட்டைக்கு வந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம்தேதி திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் முயல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ெவங்கடேசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த காமராஜ் பால் (54), வேளச்சேரியை சேர்ந்த அவரது சகோதரர் பாஸ்கர் பால் (51) ஆகியோர் உள்பட 5 பேர் ஒரு காரில் சென்றனர். அவர்களது கார் டிக்கியில் ஒரு துப்பாக்கி மற்றும் ஏர்கன் போன்றவையும், 230 துப்பாக்கி குண்டுகளும் இருந்தன. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் என்றும், துப்பாக்கிகளுக்கு உரிமம் உள்ளது என்றும் கூறினர். இதையடுத்து அந்த உரிமங்களை எடுத்து வருமாறு கூறி போலீசார், அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நீண்ட நாட்களாகியும் அவர்கள் திரும்ப வராததால் போலீசார் கடந்த மாதம் காமராஜ் பால் (54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அவரின் தம்பியான வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் பால் (51), தண்டலம் கிராமத்தை சேர்ந்த மகஷே் (40) ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கொண்டங்கி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி அடிக்கடி மது விருந்து மற்றும் முயல் வேட்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. ஒரு துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதும், மற்றொரு துப்பாக்கிக்கு உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் மீது ஆயுதத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post முயல் வேட்டை வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Thiruporur ,Tandalam ,Tiruporur ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ