×

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீ வைத்து எரிப்பு

ஆரல்வாய்ெமாழி, பிப்.18: ஆரல்வாய்மொழி அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவி மீது கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ் (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி இரக்கம் (52). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் திருமணம் முடிந்து தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். 2வது மகள் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் கணவன்- மனைவி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார்கள்.புஷ்பதாசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. புஷ்பதாஸ் தினமும் போதையில் வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. அப்போது அதிக போதையில் இருந்த புஷ்பதாஸ் அவரது மனைவியை சரமாரியாக தாக்கினார். வலி தாங்கமுடியாமல் அவர் கீழே விழுந்தார். உடனே மனைவியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் கருகிய இரக்கம் அலறியபடி வெளியே ஓடி வந்தார். அப்போது வீட்டின் பின் பக்கம் உள்ள ஓலை ஷெட்டில் தீ பிடித்தது. தொடர்ந்து ஓட முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் இரக்கத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 85 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இரக்கத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நீதிபதி நேரில் சென்று அவரிடம் வாக்கு மூலம் பெற்றார். அப்போது கணவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக இரக்கம் கூறியுள்ளார். போலீசார் புஷ்பதாசை தேடி சென்ற போது வீட்டின் பின்னால் இரக்கத்தின் செல்போன் கிடைத்தது. இதையடுத்து மகளின் எண்ணை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். அப்போது புஷ்பதாசின் செல்போன் எண்ணை போலீசார் பெற்றனர். பின்னர் அதில் தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் புஷ்பதாஸ் போனை எடுத்தார்.அவரிடம், பொது மக்கள் பேசுவதுபோல் போலீஸ்காரர் ஒருவர் பேசினார். அப்போது, இந்த செல்போன் கீழே கிடந்தது. அதை இங்கேயே போட்டுவிட்டு செல்லட்டுமா, உங்களிடம் நேரில் தரட்டுமா என்று கேட்டார். அப்போது எனது மனைவியின் செல்போன் உனக்கு எப்படி கிடைத்தது. அங்கேயே இரு நான் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று கூறினார். சிறிது நேரத்தில் ஒரு பைக்கில் வந்து இறங்கினார். அங்கு மறைந்து நின்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...