×

ஏர்ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு

திருப்பூர், பிப். 13:  திருப்பூர் நகரில் இயங்கும் பெரும்பாலான வாகனங்களில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
 திருப்பூர் நகருக்குள் நுழையும் பஸ், லாரி மற்றும் கார்களில் காற்று ஒலிப்பான் எனப்படும் ஏர்ஹாரன் ஒலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருப்பூரில் ஏர்ஹாரன் உபயோகிக்கும் வாகனங்கள் அதிகம். காதை கிழிக்கும் அலறல் சப்தங்களுடனும் சில வாகனங்களில் ஏர்ஹாரன் ஒலிப்பதால் சாலையில் நடந்து செல்வோர் அச்சமடைகின்றனர். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கனரக வாகனங்கள் ஏர்ஹாரனை உபயோகிக்கும்போது டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

திருப்பூர் நகருக்குள் நுழையும் வாகனங்கள் அதிக சப்தம் எழுப்பியபடி ஏர்ஹாரனை உபயோகிப்பதால் இருதய நோய் உள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயநிலை உள்ளது. திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்போதாவது ஒருமுறை சோதனை செய்வர். பின்னர் மாதக்கணக்கில் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்