புழல்: செங்குன்றம், திருவள்ளூர் கூட்டு சாலை, ஆலமரம் பகுதி, அன்னை இந்திரா நகர், காந்திநகர், பம்மதுகுளம், பெருமாள் அடிபாதம், எடப்பாளையம், அலமாதி வரை செல்லும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சமீப காலமாக சாலையின் இருபுறமும் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதேபோல், செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலையிலிருந்து ஜி.என்.டி சாலை செங்குன்றம் பேருந்து நிலையம், நெல் மண்டி, மார்க்கெட், புழல் ஏரி உபநீர் கால்வாய், பாலம், சாமியார் மடம் வரை சாலையின் இருபுறமும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதுமட்டுமின்றி, இரவில் சாலையிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால் இந்த இரண்டு சாலைகளிலும் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், அதன்மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிர் சேதமும் நடைபெறுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் பேரூராட்சி, பாடியநல்லூர், நல்லூர், அலமாதி ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.