×

பொங்கல் விழாவின் போது தாக்குதல் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியல்

கெங்கவல்லி, ஜன.24: கெங்கவல்லி வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தில், பொங்கல் விழாவின் போது, ஒரு தரப்பினரை தாக்கிய மற்றொரு தரப்பினரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  கெங்கவல்லி அடுத்த வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தில், காணும் பொங்கல் அன்று மாரியம்மன் கோயில் சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில் சாமி ஊர்வலம் முடிந்து ஒரு தரப்பினர் வீட்டுக்கு சென்றவர்களை, மற்றொரு தரப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள், அவர்கள் வீடு புகுந்து சரமாரியாக பொருட்களை அடித்து நொறுக்கி தாக்கினர். இந்த சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தலைவர் பதவிக்கு ஒருதலைபட்சமாக பணிபுரிந்ததால் நடந்த முன்விரோத காரணம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள், கடந்த 18ம் தேதி வீரகனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், 11பேர் மீது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் புகார் அளித்த செந்தில் என்பவர் வீட்டுக்கு சென்ற போது, புகாரை வாபஸ் பெற கூறி, மற்றொரு தரப்பை சேர்ந்த சக்திவேல் என்பவர் இருமுறை தாக்கினார். இதையடுத்து, வீரகனூர் போலீசார் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி பள்ளிக்கு சென்று வந்த அஜித்குமார் என்ற பிளஸ்2 மாணவரை 4பேர் சரமாரியாக தாக்கினர். இதில் மாணவன் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் யாரும் பள்ளி, கல்லூரிக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பாமல் போர்க்கொடி தூக்கி வந்தனர்.
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த 11பேர் மீதும், போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதை கண்டித்து, வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று  வீரகனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய செசன்றனர்.

அப்போது, வீரகனூர் பஸ் நிலையம் அருகில் வீரகனூர் இன்ஸ்பெக்டர் (பொ) பாஸ்கரபாபு மற்றும் போலீசார்அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு ஏற்படாததால், வீரகனூர்- பெரம்பலூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய 11பேரை கைது செய்ய நடவடிக்ைக எடுப்பதாக உறுயளித்தன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  
இந்த சம்பவத்தில், ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் 11பேரை கைது செய்யாமல், போலீசார் கண்துடைப்புக்காக வழக்கை பதிவு செய்து, அவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் வரை காத்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கடந்த 3 நாளுக்கு மேலாக பள்ளி, கல்லூரிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் உள்ளனர்.

Tags : Road Pilgrims ,Pongal Festival ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா