கிருஷ்ணகிரி, ஜன.19: கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளியில் நேற்று பெய்த திடீர் சாரல் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கடும் பனி பொழிவும், பகலில் வெயிலும் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதலே பனி பொழிவு மிக குறைவாகவே இருந்தது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மழைக்கான அறிகுறிகள் தெரிந்தது. இதையடுத்து காலை 10 மணியளவில் திடீர் சாரல் மழை பெய்தது. மழையால் சாலையோர காய்கறி கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். 10 நிமிடம் மட்டுமே பெய்த இந்த சாரல் மழையால் குளிர்காற்று வீச துவங்கியது. மாலை வரை மேகமூட்டம் தொடர்ந்து நீடித்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.