தண்டையார்பேட்டை: மூலக்கொத்தலம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் விபத்து தொடர்பான வழக்குப்பதிவு செய்ய ஒரு எஸ்ஐயை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூலக்கொத்தலம் மேம்பாலம் வழியாக தங்கசாலை, பாரிமுனை, ஓட்டேரி, சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. யானைகவுனி மேம்பாலம் பழுது காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது, மூலக்கொத்தலம் மேம்பாலம் வழியாக செல்கின்றன. இதனால், பாலத்தின் மையப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் இந்த பாலம் வழியாக தான் செல்வதால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எஸ்.ஐ அல்லது இன்ஸ்பெக்டர் இருந்தால் மட்டுமே இந்த விபத்துகளுக்கான வழக்கு பதிவு செய்யப்படும் நிலையில், இங்கு இரவு நேரங்களில் போலீஸ்காரர்கள் மட்டுமே பணிபுரிவதால், விபத்து வழக்கு பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது.
வடசென்னை முக்கிய பாலத்தின் மையப்பகுதியில் இரவு நேரங்களில் ஒரே ஒரு காவலர் மட்டுமே பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த காவலரும் விபத்து ஏற்பட்டால் வழக்கு பதிவு செய்ய முடியாது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து உயர் அதிகாரிகள் மூலக்கொத்தலம் மேம்பால பகுதியில் இரவு நேரங்களில் பணி செய்ய எஸ்ஐ ஒருவரை நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.