சென்னை: கடலோர காவல் படை சார்பில் காசிமேடு துறைமுகத்தில் நடந்த தூய்மை பணியில் 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி கடலோர காவல் படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலோர காவல் படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை சார்பில் நேற்று முன்தினம் காசிமேடு துறைமுகத்தில் தூய்மை பணி நடந்தது.
கடலோர காவல் படை டிஐஜி காகுல் உள்ளிட்ட கடலோர காவல் படை உயர் அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தூய்மை பணியில் துறைமுக பகுதயில் இருந்து 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, 8க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்களை சேர்ந்த 300 மேற்பட்ட மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மீனவர்களுக்கான பாதுகாப்பு, பயோ மெட்ரிக் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கான செயலி தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது