சென்னை, ஜன.10: சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியாவுக்கு கடத்த முயன்ற ₹21 லட்சம் அமெரிக்க கரன்சி மற்றும் இந்திய பணத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட 3 பெண் குருவிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது, இலங்கை வழியாக மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக செல்ல வந்த, கோவையை சேர்ந்த மகாலட்சுமி (33), சென்னையை சேர்ந்த சர்மிளா (33), திருப்பூரை சேர்ந்த சரவண செல்வி (41) ஆகியோரின் உடமைகளை பரிசோதனை செய்தபோது, ரகசிய அறைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் இருந்தன. அதோடு இந்திய பணம் ₹31 ஆயிரம் இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு ₹20 லட்சத்து 67 ஆயிரம். அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பெண்களையும் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் வெளிநாடுகளில் ஹவாலா பணத்தை கடத்த குருவிகளாக செயல்பட்டது தெரியவந்தது. வழக்கமாக, இதுபோன்ற செயல்களில் ஆண் குருவிகள் தான் ஈடுபடுவர். ஆனால் தற்போது சிக்கிய 3 பெண்கள் குருவிகளாக சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் செல்போன்கள் பறிப்பு மற்றும் வீட்டை உடைத்து கொள்ளையடித்த, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (எ) ஜோஸ்வா (22) என்பவர், மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 15 செல்போன்கள், 9 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது மெயின் ரோட்டில் உள்ள கம்பெனிமேலாளர் பாலு (54). இவர், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது காரை விற்பனை செய்ய மாங்காடு, சக்கரநகரை சேர்ந்த மோட்டார் ஏஜென்சி மேலாளர் ரஞ்சித் கண்ணா (40) என்பவரிடம் வழங்கினார். ஆனால் காரை விற்று பணத்தை தராமல் மோசடி செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித்கண்ணாவை நேற்று கைது செய்தனர்.