தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி ஆவுடையப்ப நாயக்கன் தெருவில் நேற்று காலை மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனை சரி செய்ய கோரி சவுகார்பேட்டை ஏழுகிணறு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த வின்சென்ட் (40), எண்ணூரை சேர்ந்த உதயா (45) ஆகிய இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஆவுடையப்பன் தெரு கோவிந்தப்பன் தெரு சந்திப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் வின்சென்ட் டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். உதயா மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மர் மீதே உடல் கருகி பலியானார். தகவலறிந்து கொத்தவால்சாவடி போலீசார், உயர்நீதிமன்ற தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்சுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ய அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.