அண்ணா நகர்: கோயம்பேடு மார்க்கெட் நுழைவாயிலில் உள்ள இரும்பு குழாய்களால் ஆன பாதையில், 7 பேரின் கால்கள் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டன. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என தனித்தனி மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. சென்னை மற்ரும் புறநகர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு மார்க்கெட்டின் நுழைவாயிலிலும் மாடுகள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக 1ம் கேட் இருந்து 18ம் கேட் வரையில் இரும்பு குழாய்களால் ஆன நுழைவாயில் தடுப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மழை அதிகமாக பெய்ததால் கோயம்பேட்டில் மார்க்கெட் முழுவதும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த குழாய்களால் ஆன பாதை முழுவதும் மழைநீரில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் மூன்று சக்கர சைக்கிளில் கொத்தமல்லி மூட்டையை ஏற்றி சென்ற கிருஷ்ணன் (42), காய்கறி வாங்க வந்த அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோரின் கால்கள் அந்த இரும்பு குழாய்களில் மாட்டிக்கொண்டது. இதனால் அவர்கள் கால்களை வெளியே இழுக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். உடனே அவர்களுக்கு உதவி செய்ய சிவா என்பவர் சென்றார். அப்போது அவரது கால்களும் சிக்கியது. மேலும் அவரை காப்பாற்ற சென்ற சிஎம்டிஏ ஊழியர் ஒருவரின் கால்களும் சிக்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.