அண்ணாநகர்: கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து இணை கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு 100 அடி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் எப்பொழுதும் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படும். மேலும், வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலனுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பினால் சாலைகளில் கழிவுநீர் தேக்கம், சாலையோர பள்ளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவ்வழியாக அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்கள் நீண்டநேர தாமதத்துக்கு பிறகே குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் அவல நிலை இருப்பதாக காவல் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.