×

முருகன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விழுப்புரம்,  டிச. 12: விழுப்புரத்தில் முருகன் கோயில் உண்டியலை உடைத்து பணம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  கே.கே ரோடு அண்ணாநகரில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அதே பகுதியை  சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இதனிடையே நேற்று  முன்தினம் இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு  சென்றுள்ளார். நேற்று காலை துப்புரவு பணியாளர் வளர்மதி என்பவர் கோயிலை  சுத்தம் செய்ய வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை  கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக உடனடியாக விழுப்புரம் மேற்கு  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவு ஒரு மணியளவில் அருகிலுள்ள  வீட்டின் மதில் சுவர் எகிறி உள்ளே குதித்து வந்த மர்மநபர் உண்டியலை உடைத்து  ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு  செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை