தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பு, கரும்பாட்டூர் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட சாஸ்தான்கோவில்விளை, காமராஜபுரம், செட்டிவிளை, சோட்டப்பணிக்கன்தேரிவிளை, ஆண்டிவிளை, சித்தன்குடியிருப்பு தென்தாமரைகுளம் அருகே காட்டுவிளை ஆகிய ஊர்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சாக்கடையாக மாறி பிளாஸ்டிக்கழிவுகள் நிறைந்து சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. மழைநீர் மறுகால் ஓடைகளை முறையாக பராமரிக்காததால் கனமழை பெய்யும் வேளைகளில் அனைத்து பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. மழை நீர் ஓடைகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் கன மழையின் போது மறுகால் ஓடைகள் மூழ்கி விடுகிறது. இதனால் மழை நீர் முழுவதும் தோப்புகள், பள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேங்கி விடுகின்றன. இப்பகுதிகளில் உள்ள ஓடைகள் மிகவும் பழமையானவை. தேங்கியுள்ள நீர் வற்ற இன்னும் சில மாதங்கள் வரை ஆகும். சாஸ்தான்கோவில்விளை அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள தோப்புக்குகளுக்குள் 3 மாதமாக சூழ்ந்துள்ள வெள்ளம் பாசி படர்ந்து கரும்பச்சை நிறத்தில் துர் நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகின்றது.
இதன் அருகில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. மாணவர்கள் ெகாசுகடியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொற்றையடியில் இருந்து வரும் வெங்கலராஜன் சானலை இன்னும் ஆழப்படுத்தி சீரமைத்து அந்த நீர் மக்களுக்கு முறையாக பயன்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழையில் வெங்கலராஜன் சானலில் இருந்து அய்யாநகர் செல்லும் நீரோடை முழுவதும் மூழ்கி ேதாட்டங்கள், குடியிருப்புகளை சூழ்ந்தது. நீரோடை முழுவதும் செடிகள், கழிவுகள் காணப்படுவதால் தண்ணீர் செல்ல தடை ஏற்படுகிறது. சாமிதோப்பு வடக்கு வாசல் சாலையில் அமைந்துள்ள பாலர்பள்ளி அருகேயும் மூன்று மாதமாக தண்ணீர் கட்டி நிற்கிறது. அந்த தண்ணீர் வெளியே செல்ல முடியாததால் மாதக்கணக்கில் அப்படியே நிற்கிறது. மற்றொரு புறம் வரும் தண்ணீரை சாமிதோப்பு ஊருக்கு உள்ளாக திருப்பி விட்டு உப்பளம் மழை நீர் மறுகால் ஓடை மூலம் மணக்குடிக்கு திருப் பிவிட்டனர்.
தற்போதும் அய்யா நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகமான கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சானல்கள், மறுகால் நீரோடைகள் முறையாக பராமரித்து நீர்வரத்துக்கு தடையாக உள்ள பகுதிகளை சீர் செய்து சுகாதாரசீர்கேடுகள் ஏற்படாத வண்ணம் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.