நாகர்கோவில், டிச. 10: அகில இந்திய தொழில்நுட்ப துறையின் உயரிய அமைப்பான புதுடெல்லியை சேர்ந்த ஐஎஸ்டிஇ அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து சிறந்த பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு மகளிர் பொறியியல் கல்லூரிக்கான பிரிவில். இந்தியாவிலேயே சிறந்த மகளிர் பொறியியல் கல்லூரியாக அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பெற்ற பரிசுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம், சமூகத்துக்கு பயனுள்ள புராஜெக்ட் மற்றும் பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கட்டுரைகள் வெளியிடுதல், பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களது பங்களிப்பு மற்றும் கட்டுரைகள் வெளியிடுதல், பல்வேறு அரசு அமைப்புகளிடம் இருந்து பெற்ற புராஜெக்ட் மற்றும் பேட்டண்ட், கல்லூரியின் கட்டுமான அமைப்பு மற்றும் கல்லூரியில் உள்ள பல்வேறு இதர வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அருணாச்சலா கல்லூரி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள எஸ்ஓஏ நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஏஐசிடிஈ சேர்மன் முனைவர் அனில் டி.சஸ்ரபுரின் இந்த விருதை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி மற்றும் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் ஆகியோர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுரப்பா, ஏஐசிடியின் முன்னாள் சேர்மன் முனைவர் தாமோதர ஆச்சாரியா, ஐஎஸ்டியின் தேசிய தலைவர் முனைவர் பிரதாப் சிங் நேடாய், ஏஐசிடியின் ஆலோசகர் உமா நடேசன், டெல்லி நாக் அமைப்பின் ஆலோசகர் முனைவர் ராத், தேசிய புராஜெக்ட் அமைப்பின் ஆலோசகர் முனைவர் கேக்டே, எஸ்ஓஏ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அமிட் பானர்ஜி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். விருதுபெற காரணமாக இருந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இதர பணியாளர்கள் மற்றும் மாணவிகளை கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் வாழ்த்தினர்.