கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி அருகே, லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் தனியார் நிறுவனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணெகோல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன்(28). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது நண்பரான பீமாண்டப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி(25) என்பவருடன், கக்கன்புரம்-எண்ணெகோல்புதூர் பிரிவு சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த லாரி, அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே திம்மராயன் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வெங்கடாஜலபதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையறிந்த திம்மராயனின் உறவினர்கள், சம்பவ இடத்தில் திரண்டு, விநாயகபுரத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த காவலாளி அறையின் கண்ணாடிகளை உடைத்தனர்.