ஓசூர், டிச.9: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து, 2வது நாளாக 408 கனஅடியாக நீடித்தது. கர்நாடக மாநிலம் தென்பெணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம், பெங்களூரு, சர்ஜாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, நேற்று 2வது நாளாக 408 கனஅடியாக நீடித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோபசந்திரம், பாத்தகோட்டா ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் முழு கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 41.66 அடி தண்ணீர் உள்ளது.