உளுந்தூர்பேட்டை, டிச. 4: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள சாக்கடை போடும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் தற்போது பள்ளம் போட்டு பைப் லைன்கள் போடப்பட்டு மூடப்பட்ட நிலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சில குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் தார் சாலை போடப்பட்ட நிலையில், கந்தசாமிபுரம், அன்னை சத்யா தெரு, மாடல்காலனி, உ.கீரனூர் காலனி, மிளகுமாரியம்மன் கோயில் தெரு, உளுந்தாண்டார்கோயில் தெரு, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட அதிக அளவு பொதுமக்கள் வசிக்கும் தெருக்களில் இதுவரையில் தார் சாலை போடும் பணி நடைபெற வில்லை. பெருமாள் கோயில் தெருவில் சாலை போடுவதற்காக கருங்கல் ஜல்லி மட்டும் கொட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் சாலை போடப்படவில்லை.
இதனால் பாதாள சாக்கடை திட்டத்திற்கு போடப்பட்டுள்ள சிமெண்ட் மூடிகள் சாலையை விட உயரமாக இருப்பதால் இரவு மற்றும் பகல் நேரத்தில் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது இதில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்வதற்கே அச்சம் அடைந்து வருகின்றனர். இது குறித்து பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை போடும் பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.