அம்பத்தூர்: அம்பத்தூர் கம்பெனி அதிபர் கொலையில் பீகாரில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (27). அம்பத்தூர் நடேசன் நகரில் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 22ம் தேதி பிரபாகரன் கம்பெனியில் இருந்தபோது அவரது தந்தை ஆனந்தன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பிரபாகரன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் கம்பெனிக்கு வந்து பார்த்தபோது பிரபாகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் கம்பெனியில் இருந்த பணம் மற்றும் செல்போன் திருடு போய் இருந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கம்பெனியில் வேலை பார்த்த பீகாரை சேர்ந்த ஜிஜேந்தர் (19), ரோஷன் (19) ஆகியோர் மாயமானது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் 22ம் தேதி இரவு 9.15 மணியளவில் மேற்கு வங்கம் செல்லும் ரயில் மூலம் பீகாருக்கு தப்பியது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பீகாருக்கு விரைந்தனர். ஆனால் போலீஸ் வந்ததை அறிந்து இருவரும் பதுங்கி விட்டனர். எனவே அவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பீகாரில் முகாமிட்டு தேடி வந்தனர்.