விக்கிரவாண்டி, நவ. 22:
மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மயிலம் காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது வானூர் அருகே உள்ள எறையூர் கல்குவாரியில் இருந்து அரசு அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மகாபலிபுரத்திற்கு சிலைகள் செய்வதற்காக 29 கற்கள் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
விசாரணையில் திண்டிவனத்தை சேர்ந்த பார்த்த சாரதி என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரி என்றும், லாரியை ஓட்டி வந்தது திண்டிவனம் அடுத்த பூதேரியை சேர்ந்த வேலுச்சாமி (36) என்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் வேலுச்சாமியை கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.16 லட்சமாகும்.