போளூர், நவ.19: போளூர் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு வீடு கட்டும் ஆணையை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். போளூர் ஒன்றிய அலுவலகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த சிறப்பு குறை தீர்வு முகாம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.முகாமில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு போளூர் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் 105 பேர் மனுக்கள் அளித்தனர். இதில் 58 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வீடுகட்ட ஆணைகள் வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி செயலாளர் ச.சரண்யாதேவி, தாசில்தார் பா.ஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சுப்பிரமணியன், பா.ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.