குளச்சல், நவ. 19: மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் ஏசுதாஸ்(28). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் இரவு அப்பகுதியை சேர்ந்த லூயிஸ் என்பவர் வீட்டு முன் தனது ஆட்டோவை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் இரவு வழக்கம் போல ஆட்டோவை நிறுத்தி சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சவாரி செல்வதற்காக ஆட்டோவை எடுக்க வந்தார். அப்போது ஆட்டோவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதையடுத்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.