சென்னை: வெறிநாய் கடி இல்லா சென்னை திட்டத்தின்படி, இதுவரை 41 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கால்நடை அலுவலர் கமால் உசேன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறிபிடித்த தெரு நாய்கள் சாலையில் நடத்து செல்பவர்களை கடித்து விடுகின்றன. மேலும் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்ேவார் தெரு நாய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வெறிநாய்கடி இல்லாத சென்னை திட்டத்தின்படி தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவற்றின் எண்ணிக்கையை கண்டறிய சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சியில் 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் செந்தில்நாதன், மாநகர கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் ஆகியோர் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 41 ஆயிரம் நாய்களை பிடித்து, அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.