நாமக்கல், நவ.12: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் கலெக்டர் மெகராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பட்டய படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு எழுதினோம். தமிழ், ஆங்கிலம் உள்பட 7 பாடத்திற்கான தேர்வுகள் எழுதினோம். இதற்கான முடிவுகள், கடந்த மாத இறுதியில் வெளியானது. இதில் எங்கள் பள்ளியில் தேர்வு எழுதிய யாரும், 7 பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 2 பேர் மட்டும் 2 பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற அனைவருக்கும், அனைத்து பாடத்திலும் ஒற்றை இலக்கத்தில் தான் மதிப்பெண் கிடைத்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்துள்ளது. அனைவரும் டிகிரி முடித்து விட்டுத்தான், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து உள்ளோம்.