நெல் பயிருக்கு காப்பீடு செய்ய காலக்கெடு நீடிப்பு

சேலம், நவ.8: சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் நடப்பாண்டிற்கான நெல் (சம்பா) பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 28,388 ஏக்கர் பரப்பளவில் நெல் (சம்பா) சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் நெல் (சம்பா) சாகுபடி செய்யப்பட்டது. நெல் பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கவும், விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற முகவரி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல் பயிருக்கு வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் ஏக்கருக்கு ₹470 பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெல் (சம்பா) பயிருக்கு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: